Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Nataraja Pathu Lyrics in Tamil

Nataraja Pathu Lyrics in Tamil from Sivan Songs. Esane Sivagami Nesane or Nataraja Pathu Lyrics penned in Tamil by Chirumanavoor Muniswamy.

Nataraja Pathu Tamil Lyrics

மண்ணாதி பூதமொடு
விண்ணாதி அண்டம் நீ
மறைநான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ
புனலும் நீ அனலும் நீ
மண்டலமிரண்டேழு நீ

பெண்ணும் நீ ஆணும் நீ
பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ யொருவ நீயே
பேதாதிபேதம் நீ
பாதாதி கேசம் நீ
பெற்றதாய் தந்தை நீயே

பொன்னும் நீ பொருளும் நீ
இருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணா கிரகங்கள்
ஒன்பதும் நீ இந்த புவனங்கள்
பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோடிகளை
ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

மானாட மழுவாட
மதியாட புனலாட
மங்கை சிவகாமி யாட
மாலாட நூலாட
மறையாட திறையாட
மறைதந்த பிரமனாட

கோனாட வானிலகு
கூட்டமெல்லாமாட
குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட
தண்டை புலி யுடையாட
குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரோடு
இந்திராதி பதினெட்டு முனி
அட்ட பாலகருமாட
நரை தும்பை அருகாட
நந்தி வாகனமாட
நாட்டியப் பெண்களாட

வினையோட உனைப்பாட
எனைநாடி இதுவேளை
விரைந்தோடி ஆடி வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

கடலென்ற புவிமீதில்
அலையென்ற உருக்கொண்டு
கனவென்ற வாழ்வை நம்பி
காற்றென்ற மூவாசை
மாருதச் சுழலிலே
கட்டுண்டு நித்த நித்தம்

உடலென்ற கும்பிக்கு
உணவென்ற இரைதேடி
ஓயாமலிரவு பகலும்
உண்டுண்டுறங்குவதைக்
கண்டதே யல்லாது
ஒருபயனுமடைந்திலேனை

தடமென்ற மிடிகரையில்
பந்தபாசங்களெனும்
தாவரம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று
நீயென்று நானென்று
தமியேனை இவ்வண்ணமாய்

இடையென்று கடைநின்று
ஏனென்று கேளாது
இருப்பதுனக்கழகாகுமா

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

பம்புசூனியமல்ல
வைப்பல்ல மாரணம்
தம்பனம் வசியமல்ல
பாதாள வஞ்சனம்
பரகாயப் பிரவேச
மதுவல்ல சாலமல்ல

அம்புகுண்டுகள் விலக
மொழியு மந்திரமல்ல
ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற
வாதமோடிகளல்ல
அறியமோகனமுமல்ல

கும்பமுனி மச்சமுனி
சட்டமுனி பிரம்மரிஷி
கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர்
போகமுனியிவரெலாம்
கூறிடும் வயித்தியமுமல்ல

என்மனது உன்னடிவிட்டு
நீங்காது நிலைநிற்க
ஏது புகல வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

நொந்துவந்தே னென்று
ஆயிரம் சொல்லியும்
நின்செவியில் மந்தமுண்டோ
நுட்பநெறியறியாத
பிள்ளையைப் பெற்றபின்
நோக்காத தந்தையுண்டோ

சந்ததமும் தஞ்சம்
என்றடியைப் பிடித்தபின்
தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகன் அறுமுகன்
இருபிள்ளையில்லையோ
தந்தை நீ மலடுதானோ

விந்தையும் ஜாலமும்
உன்னிடமிருக்குதே
வினையொன்றும் அறிகிலேனே
வேதமும் சாஸ்த்ரமும்
உன்னையே புகழுதே
வேடிக்கை இதுவல்லவோ

இந்தவுலகு ஈரேழும்
ஏனளித்தாய் சொல்லு
இனியுன்னை விடுவதில்லை

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

வழிகண்டு உன்னடியைத்
துதியாத போதிலும்
வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய்க் கோயில்
சுற்றாத போதிலும்
வஞ்சமே செய்தபோதிலும்

மொழியென்ன மொகனை
இல்லாமலே பாடினும்
மூர்க்கனே முகடாகினும்
மோசமே செய்யினும்
தேசமே தவறினும்
முழு காமியே ஆயினும்

பழி எனக்கல்லவே
தாய்தந்தைக்கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லுவார்கள்
பாரறிய மனைவிக்குப்
பாதியுடலீந்த நீ
பாலன் எனைக் காக்கொணாதோ

எழில் பெரிய அண்டங்கள்
அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

அன்னைதந்தையர்
என்னை ஈன்றதற்கழுவனோ
அறிவிலாததற்கழுவனோ
அல்லாமல் நான்முகன்
தன்னையே நோவனோ
ஆசை மூன்றுக்கழுவனோ

முற்பிறப்பென்வினை
செய்தேனென்றழுவனோ
என் மூட உறவுக்கழுவனோ
முற்பிறப்பின் வினைவந்து
மூளுமென்றழுவனோ
முத்தி வருமென்றுணர்வனோ

தன்னைநொந்தழுவனோ
உன்னை நொந்தழுவனோ
தவமென்ன எனுறழுவனோ
தையலார்க்கழுவனோ
மெய்தனக்கழுவனோ
தரித்திர தசைக்கழுவனோ

இன்னமென்னப் பிறவிவருமோ
வென்றழுவனோ
எல்லாமுரைக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

காயாமுன் மரமீது
பூபிஞ் சறுத்தனோ
கன்னியர்கள் பழிகொண்டனோ
கடனென்று பொருள்பறித்தே
வயிறெரித்தனோ
கிளைவழியில் முள்ளிட்டனோ

தாயாருடன் பிறவிக்கென்ன
வினை செய்தனோ
தந்தபொருளிலை யென்றனோ
தானென்று கெர்வித்து
கொலைகளவு செய்தனோ
தவசிகளை ஏசினேனோ

வாயாரப் பொய்சொல்லி
வீண்பொருள் பறித்தனோ
வாணவரைப் பழித்திட்டனோ
வடிவுபோலே பிறரைச்
சேர்க்கா தடித்தனோ
வந்தபின் என் செய்தனோ

ஈயாத லோபி என்றே
பெயரெடுத்தனோ
எல்லாமும் பொறுத்தருளுவாய்

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

தாயாரிருந்தென்ன
தந்தையுமிருந்தென்ன
தன்பிறவியுறவு கோடி
தனமலை குவித்தென்ன
கனபெயரெடுத்தென்ன
தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன
குருவாய இருந்தென்ன
சீடர்கள் இருந்துமென்ன
சித்துபல கற்றென்ன
நித்தமும் விரதங்கள்
செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும்
என்ன பயன் எமனோலை
ஒன்றை கண்டு தடுக்க
உதவுமோ இதுவெல்லாம்
சந்தையுறவு என்று தான்
உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனம்
இருந்தாலுமுன் கடைக்
கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

இன்னமும் சொல்லவோ
உன்மனம் கல்லோ
இரும்போ பெரும்பாறையோ
இருசெவியும் மந்தமோ
கேளாத அந்தமோ
இது உனக்கழகு தானோ

என்னென்ன மோகமோ
இதுஎன்ன கோபமோ
இதுவோ உன்செய்கை தானோ
இருபிள்ளைதாபமோ
யார்மீது கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ

உன்னை விட்டெங்கெங்கு
சென்றாலும் விழலாவனே
நான் உனையடுத்துங் கெடுவனோ
ஓஹோவிது உன்குற்றம்
என்குற்றம் என்றும் இல்லை
உற்றுபார் மாபெற்ற ஐயா

என் குற்றமாயினும்
உன் குற்றமாயினும்
இனியருள் அளிக்க வருவாய்

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

சனி ரகு கேது
புதன் சுக்ரன் செவ்வாய்
குரு சந்திரன் சூர்யன் இவரை
சற்று எனகுள்ளக்கி
ராசி பனிரண்டையும்
சமமாய் நிறுத்தியுடனே

பணியோத நக்ஷத்ரங்கள்
இருபத்தி எழும்
பக்குவ படுத்தி பின்னால்
பகர்கின்ற கிரணங்கள்
பதினொன்றையும்
வெட்டி பலரையும் அதட்டி என் முன்

கனி போலவே பேசி
கேடு நினைவு நினைக்கின்ற
கசடர்களையும் கசக்கி
கத நின் தொண்டராம்
தொண்டர்க்கு தொண்டர்கள்
தொழுத நாகி

இனியவள மருவு
சிறுமணவை முனிசாமி
எனை ஆள்வதினி
உன் கடன் காண்

ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.